விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக வழக்கில் விசாரணை அதிகாரியாக பெ.அமுதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையில், விசாரணை கைதிகளாக இருந்த 4 பேரிடம் விசாணை நடத்திய அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ், விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கியதாக புகார் எழுந்தது. மேலும் காவலர்கள் பலரும் இணைந்து விசாரணை கைதிகளிடம் மோசமான முறையில் துன்புறுத்தும் விதமாக நடந்துகொண்ணடதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் விசாரணை நடத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பான பல்வீர் சிங் ஐபிஎஸ் கடந்த மார்ச் 29-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் விசாரணை மேற்கொண்டு தனது முதற்கட்ட அறிக்கையை கடந்த ஏப்ரல் 3-ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்தார். இதனிடையே அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள வேறு காவல் நிலையங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தற்போது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த புகார்களை கருத்தில்கொண்டு ஒரு உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இந்த வழக்கில், பெ.அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகரியாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணையை ஒரு மாத காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசு சார்பில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil