scorecardresearch

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்: தமிழக அரசு புதிய ஆணை

ரேசன் அட்டைகளுடன் வங்கி கணக்கு இணைக்கப்பட வேண்டும்; வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, புதிதாக கணக்கு தொடங்கி இணையத்தில் பதிவேற்ற வேண்டும்; கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்: தமிழக அரசு புதிய ஆணை

ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது கட்டாயம் என்றும், அதன் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு எண் இல்லாத 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று பதிவேற்றம் செய்தல் மற்றும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் புதிய வங்கி கணக்கு துவங்கி அதன் விவரங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அறிவுரைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது

அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் மாவட்ட வாரியாக 14,86,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த வங்கி கணக்கு எண்ணும் இல்லை என்பது தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. இந்த குடும்ப அட்டைதாரர்களில் பலர் வங்கி கணக்கு வைத்திருந்தும் அத்துடன் ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அணைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்கெனவே வங்கி கணக்கு இருந்தால், அதன் விவரங்களை பெறுவதற்கும், இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) துவங்குவதற்கும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட கடைப் பணியளார் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களிடம் அந்த வங்கி கணக்கு எண் பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் எடுத்து, அதில் குடும்ப அட்டை எண்ணையும், குடும்பத் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு வழங்குமாறு பெற்று, அந்தந்த குடும்ப அட்டைதாரர்களுக்குரிய 11 விவரக் குறிப்புகள் அடங்கிய அந்த நகலுடன் இணைத்து, அந்த பகுதிக்குரிய கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர்களுக்கு விவரங்களை அளித்து கணினி மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வங்கி கணக்கு எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்த 11 விவரக் குறிப்பு அடங்கிய Sheet-உடன் சேர்த்து அருகாமையிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை நேரில் அணுகி ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) ஒன்றை ஆரம்பித்து, அதனை குடும்ப அட்டைதாரர் விவரங்களுடன் இணைத்து மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி, கணினி மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலமாக பெறப்பட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாக சென்று சேரும் வகையில், ரேசன் கார்டுகளுடன் வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu govt order to link bank account details to ration card