பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக டோக்கன் வழங்கும் பணி வருகின்ற 27 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர்.
இதையும் படியுங்கள்: பொங்கல் தொகுப்பு சர்ச்சை: எங்களை மட்டும் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறிவிட்டு ரூ.1000 வழங்குவதா ? இ.பி.எஸ்
அந்த வகையில், ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கன் வழங்கப்படுவது ஏன்?
பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்த இடத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13 ஆம் தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கி முடிக்க பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, பயனாளர்களின் குடும்பத்தில் ஒருவரது கைவிரல் ரேகை பதிவு அவசியம். அதேபோல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கம் பெற ஸ்மார்ட் கார்டுடன் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil