/indian-express-tamil/media/media_files/2025/04/17/2LqPMGjBzxoEIkxUy9N3.jpg)
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாக மருதமலையில் முருகனுக்கு 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும். கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக 184 அடிஉயர முருகன் சிலை அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலை எளிதில் சென்றடைய கட்டணமின்றி இழுவை இரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில், கரூர் அய்யர்மலை இரத்தின கிரீசுவரர் கோயில்களில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதில் சென்றடைய கட்டணமின்றி கம்பிவட ஊர்தியில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களிலும், இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா மற்றும் சிறப்பு நாட்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும் 13 திருக்கோயில்கள் மற்றும் இவ்வாண்டு அன்னதானத் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ள 2 திருக்கோயில்களிலும், வழக்கமாக வழங்கும் அன்னதான உணவுடன் வடை மற்றும் பாயாசம் சேர்த்து வழங்கப்படும்.
சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டம் 10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒருகால பூஜைத்திட்ட திருக்கோயில்களில் பூசைசெய்யும் அர்ச்சர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாத ஊக்கத் தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.25 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்
திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி கடந்த மூன்றுஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.70,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்திவைக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் காலிப் பணியிடங்களில் திருக்கோயில்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்ற ஓதுவார்களுக்கும், பெண் ஓதுவார்களுக்கும் பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடற்கரை கடல் அரிப்பை தடுக்கும் பணி மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருவிழா நாட்களில் கட்டணத் தரிசனம் ரத்து செய்யப்படும்.
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் மூலவர் அம்மன் திருமேனிகளுக்கு தங்கக் கவசங்கள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித் தேர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.
திருக்கோயில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு கூடுதலாக, இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் கோயில், திருநாகேசுவரம் நாக நாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்தப்படும்.
அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் 19 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக கோவை, பேரூர், பட்டீசுவர சுவாமி திருக்கோயில், திருவள்ளூர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 2 கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாற்று மலைப்பாதை ரூ.57.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பழனி தண்டாயுத பாணி சுவாமி கோயில் சார்பாக இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் விடுதி மாணவ மாணவியருக்கு அனைத்து நாட்களிலும் மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும். திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஸ்ரீகாந்திமதியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் 100 மாணவியருக்கு கட்டணமில்லாமல் உறைவிடம் மற்றும் உணவு வழங்கப்படும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுக்கு ஆண்டுக்கு 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டபக்தர்களை ஆன்மிகப் பயணமாக அரசு நிதியில் அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரை 2,000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாண்டு 2,000 பக்தர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.