/indian-express-tamil/media/media_files/2025/09/08/dsp-shankar-ganesh-2025-09-08-19-52-55.jpg)
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பூசிவாக்கம் பகுதியில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக புகார் அளித்து, ஒருமாத காலமாகியும் நடவடிக்கை எடுக்காததால் எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறை சீருடையுடன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருவேறு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடி சண்டையாக மாறியது. இது குறித்து ஒரு தரப்பினர், எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தும் காவல்துறை தரப்பில் இருந்து இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டம் அனைவருக்கும் சமமானது. இந்த வழக்கில், நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் கெடு விதித்து உத்தரவிட்டது. மேலும் நடவடிக்கை இல்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார், இன்று நடைபெற்ற விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி சங்கர் கணேஷ் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து சீருடையில் இருந்த டி.எஸ்.பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 22-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது, சப் ஜெயில் பகுதியில் காவல்துறை வாகனத்தில் இருந்து சங்கர் கணேஷ் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தப்பிச்செல்ல சக காவலர்களே உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.