கட்சத்தீவை திரும்ப பெறக் கோரி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பா.ஜ.க தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு கபட நாடகம் என்ற அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபையில், கட்சத்தீவு மீட்பு தொடர்பான அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால், தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு, இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவான இது தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். என்ன சவால் இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இவ்வாறு தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டால் இப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்களா? கட்சத்தீவை கொடுத்து ஒப்பந்தம் போட்டபோதே அதனை எதிர்த்து கேள்வி கேட்டவர் அப்போதைய முதல்வர் கலைஞர்.
தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்ற கூறியிருந்தார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் ஏற்படும், அனைத்து இன்னல்களை போக்கிடவும், கட்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி. அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு கட்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கட்சத்தீவை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு முறை பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையுமு், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். கட்சத்தீவை மீட்க தமிழக அரசு கொண்டு வந்த இந்த தனி தீர்மானத்திற்கு சட்டசபையில் பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மீனவர் நலனில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் வேறுபாடு கிடையாது. ஜனநாயகனத்திற்கு விரோதமாக கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது முதல் தற்போதுவரை இது குறித்து பா.ஜ.க குரல் எழுப்பி வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் நன்மதிப்பை பெற்றுள்ள பிரதமரால், வரலாற்று தவரை சரி செய்ய இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.
கட்சத்தீவு மீட்பு தீர்மானத்திற்கு, சட்டசபையில் பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சத்தீவு மீட்கு தீர்மானம் ஒரு கபட நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.