டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் ரசீது கொடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்கும் முயற்சியாக ராமநாதபுரம், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களிலும் கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது. நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது என்றும் அவ்வாறு வேறுபாடு இருந்தால் 50 சதவீதம் அபராதம் ஜி.எஸ்.டி.யுடன் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“