கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மிலம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரைக் கிளையை பொறுத்தவரை, வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து ஐந்து வழக்கறிஞர்களை மட்டும் அனுமதித்து நீதிமன்ற அறையிலும் வழக்குகளை விசாரிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணை மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil