மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான் என்று மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோயில் வெள்ளி ரதம், வெள்ளோட்டம் துவக்க விழாவில் மதுரை ஆதினம் பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உடைய இந்த கோயிலில் உபயதாரர்களின் பங்களிப்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதம், வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆதீனங்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அப்போது ஆதீனங்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திமுக ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 34 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால் இது ஆன்மீக ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன ஆட்சி என்று சொல்ல முடியும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ள 64 தங்க ரதங்களும், 84 வெள்ளி ரதங்களும் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக் கடனுக்கு வீதி உலா வருகிறது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட ஐந்து தங்க ரதங்களில் பெரியபாளையம் திருக்கோயிலில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கரதம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, மேடையில் பேசிய மதுரை ஆதீனம், "தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. அமைச்சர் பெயர் சேகர்பாபு என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு. இருவரும் ஏன் சேர்ந்து இருக்கிறோம்? கோயில் நிலங்களுக்கு குத்தகை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிற பாபுக்களுக்கு ஆப்பு அடித்து ஒரே அமுக்காக அமுக்குவதற்காகத்தான்.
ஆன்மீக அரசு என்று அமைச்சர் சொன்னார். ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்கு உண்டு. சிறப்பான முறையில் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை, சேகர் பாபு செய்து காட்டியுள்ளார். மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக டைட்டாக இருக்க வேண்டும். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. ஆதின வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதல்வர் ஆனவுடன் தண்டபாணி தேசியருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.
தருமபுர ஆதீனமும் ஐயா சேகர்பாபுவும் ஒன்று. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு . இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம்.அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி வெள்ளப்பெருக்கில் சிறப்பாக பணியாற்றினார்” என்றார் மதுரை ஆதீனம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.