மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறுவர்களுக்கு சத்துணவாக வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி காணப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கன் வாடி மையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு சென்ற சிறுமி ஒருவர், கொழுக்கட்டையை உண்ணும் முன் அதில் கரப்பான் பூச்சி இருப்பதை கவனித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். பின்னர் தாயார் உறுதிப்படுத்தி பார்த்தபோது, உண்மையிலேயே கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பதட்டமடைந்த பெற்றோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு மருத்துவர் இல்லாததால், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது குழந்தை அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நல்லவேளையாக, குழந்தை பூச்சியுடன் உள்ள கொழுக்கட்டையை உண்ணவில்லை என்பதால், உடல் நல பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி பணியாளர் ஒருவர் அவசரமாக மையத்திலிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அங்கன்வாடிகளில் உணவு தரம் குறித்த கவலையை மீண்டும் மையத்துக்கொண்டு வந்துள்ளது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மையத்தில் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.