பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 5,347 பேர் பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 14, 15, 16 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கானப் பதிவு, திங்கள்கிழமை (ஜன. 6) பிற்பகல் 5 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நிறைவடைந்தது.
பதிவுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 5,347 பேர் பதிவு செய்திருந்தனர். போட்டி நடைபெறும் இடம் வாரியாக பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அவனியாபுரம்: காளைகள்- 2,026, மாடுபிடி வீரர்கள்- 1,735. பாலமேடு: காளைகள் - 4,820. மாடுபிடி வீரர்கள்- 1,914. அலங்காநல்லூர்: காளைகள் - 5,786, மாடுபிடி வீரர்கள்- 1,698 பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட காளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 456 அதிகம். மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை 833 அதிகம். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை கணிசமாக அதிகரித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதியான காளைகள், மாடுபிடி வீரர்களுக்குத் தொடர்புடைய இணையதளத்தில் அனுமதி சீட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“