/indian-express-tamil/media/media_files/2025/06/28/tiruppur-boy-2025-06-28-20-46-18.jpg)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக கூடிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 290 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணையின் உயரம் 120 அடியாகும். இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து தற்போது 117.3 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 முதல் 75,000 கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 28, 2025 22:22 IST
8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேனியில் ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 28, 2025 21:49 IST
சீரானது நீர்வரத்து; சுருளி அருவியில் குளிக்க அனுமதி
நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் (ஜூன் 26) அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
-
Jun 28, 2025 21:38 IST
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்கள் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக சிலர் தங்கியிருப்பதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது நீலிப்பிரிவு பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பேரை பிடித்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் எனவும் விசா காலம் முடிந்த பின்பும் திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்து பனியன் கொள்முதல் செய்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்ததாகவும் தெரியவந்தது.
-
Jun 28, 2025 20:44 IST
கோவை-சேலம் மோதும் ஆட்டம் மழையால் பாதிப்பு
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதன் 26-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், திண்டுக்கல்லில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றபின் டாஸ் போடப்பட்டு, போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 28, 2025 20:08 IST
தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சேவை ஜூன் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் இந்த ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jun 28, 2025 20:07 IST
திருப்பூர்: பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அட்சயன் (15 வயது). இவர் சிவன்மலை அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் மாணவன் அட்சயன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று முறிந்து மாணவன் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவனை, ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு ய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 28, 2025 20:06 IST
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கைவிடக்கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
Jun 28, 2025 18:35 IST
சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயம்
கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 41 ரன்களும், முருகன் அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 31 ரன்களில் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். சேப்பாக் அணியை பொறுத்தவரை விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும், ரோகித் மற்றும் அபிஷேக் தன்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.
-
Jun 28, 2025 18:02 IST
"கூமாபட்டி" - பிளவக்கல் அணைக்கு செல்லத் தடை
கூமாபட்டிக்கு படையெடுக்கத் துவங்கிய சுற்றுலா பயணிகள், பிளவக்கல் அணைக்கும் வரத்தொடங்கியுள்ளனர். உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சில வெளிநபர்கள் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி யாரும் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் பொதுப்பணித்துறை அடைத்து தடையை ஏற்படுத்தியுள்ளது.
-
Jun 28, 2025 18:01 IST
வால்பாறை தொகுதி காலியானதாக அரசு அறிவிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் 21-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்நிலையில் வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதி உள்ளது. ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாத காலமே இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.
-
Jun 28, 2025 17:38 IST
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து: பெண் பரிதாப பலி
கன்னியாகுமரி அருகே இளைஞர்கள் மதுபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஒதுங்கி நின்றிருந்த ஓமனா மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி.
விபத்தை ஏற்படுத்திய அபின் ராஜ், விக்னேஷ் ஆகிய இளைஞர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
-
Jun 28, 2025 16:48 IST
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்கள் கைது
திருப்பூர் நீலிப்பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 சிகேசி, சின்வேபாலினஸ், ஆண்ட்ரூ உகோச்சுக்வு, வின்சென்ட், அந்தோணி ஆகிய 5 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசா காலம் முடிந்த பின்பும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்து பனியன் கொள்முதல் செய்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி
-
Jun 28, 2025 16:14 IST
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்ட நிலையில் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு
-
Jun 28, 2025 13:47 IST
மஞ்சள் காமாலை விவகாரம் - அமைச்சர் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கணேசன் ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், அப்பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, தீவளூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்குள் பொது கழிப்பறை கட்டப்படும் என்றும், சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மருத்துவக் குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
Jun 28, 2025 13:25 IST
வேலூர் அருகே சொகுசு கார்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் தீ விபத்து
வேலூர், பொய்கை அருகே சொகுசு கார்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
Jun 28, 2025 12:54 IST
ஆழியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
ஆழியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் அணைப் பகுதியை ஒட்டி ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
Jun 28, 2025 12:53 IST
கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!!
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
Jun 28, 2025 12:30 IST
திருப்பூரில் 5 நைஜீரியர்கள் கைது..!!
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, நைஜீரியாவுக்கு பனியன் ஏற்றுமதி செய்து வந்ததும் அம்பலமானது.
-
Jun 28, 2025 12:29 IST
மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை கைது..!!
காட்டுமன்னார்கோவில் அருகே மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனன் கைது செய்யப்பட்டார். மகள் அபிதாவின் காதலை ஏற்க மறுத்து அவரை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனனை போலீஸ் கைது செய்தது.
-
Jun 28, 2025 11:31 IST
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - கனிமொழி, அமைச்சர்கள் ஆய்வு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் நிலையில், எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
-
Jun 28, 2025 10:46 IST
மதுரை - காசநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சு திடீர் ஆய்வு
மதுரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொடுள்ளார். பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகள் மற்றும் நோய் தன்மைகளை குறித்து கேட்டறிந்தார். அங்கு உணவு தயாரிக்கும் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
-
Jun 28, 2025 10:22 IST
அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம் வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் என்ற குறியீடு வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காலை 11 மணி, மதியம் 1 மணிக்கு வாட்டர் பெல் மணி நேரம் வழங்கப்பட வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 28, 2025 09:35 IST
மதுரை காசநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மதுரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு! பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகள் மற்றும் நோய் தன்மைகளை குறித்து கேட்டறிந்தார். அங்கு உணவு தயாரிக்கும் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்!
-
Jun 28, 2025 09:09 IST
கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதி
கொடைக்கானலில் காட்டுயானைகள் இடம்பெயர்ந்ததால் வழக்கம்போல 12 சுற்றுலா பகுதிகளுக்கும் வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
Jun 28, 2025 09:08 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது, தற்போது 60,740 கன அடியில் இருந்து 73,452 கன அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது, காலை நிலவரப்படி அனையின் நீர்ட்டம் 116.80 அடியாக உயர்ந்த நிலையில், நீர் இருப்பு 88.59 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக, 22500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
Jun 28, 2025 08:38 IST
ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைவு: குளிக்க, பரிசில் இயக்க தடை நீடிப்பு
தர்மபுரி ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 88,000 கனஅடியில் இருந்து 78,000 கன அடியாக சரிந்துள்ளது. ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கவும், பரிசில் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.