/indian-express-tamil/media/media_files/2025/06/23/seeman-anbumani-2025-06-23-20-28-30.jpg)
ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன.
கர்நாடக உழவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் வாணிபக் கழகம் மூலம் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கர்நாடக உழவர்கள் பயனடைவார்கள்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கர்நாடக உழவர்கள் மாம்பழ விலை வீழ்ச்சியில் இருந்து ஒரளவு விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். அவர்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் உழவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடுக்கை இழந்தவன் கை போல, அவர்களின் இடுக்கண் களைய வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். இந்தக் கடமையை ஆந்திர அரசும், கர்நாடக அரசும் மிகச் சரியாக செய்திருக்கின்றன. ஆந்திராவில் ஒரு டன் மாம்பழம் ரூ.12 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும்; அதில் ரூ.8 ஆயிரத்தை மாம்பழக் கூழ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், மீதமுள்ள ரூ. 4 ஆயிரத்தை மாநில அரசே ஊக்கத்தொகையாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 23, 2025
கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும்,…
கர்நாடகத்திலும் மாம்பழத்திற்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதுடன் கொள்முதல் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது. மாம்பழங்கள் கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்; இது தொடர்பாக உழவர்கள் மற்றும் மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை அழைத்து முத்தரப்புப் பேச்சுகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கடந்த 4-ஆம் தேதியே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், உழவர்கள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.
உழவர்களை தவிர்த்து விட்டு மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை மட்டும் அழைத்துப் பேசுவது போல நாடகமாடிய தமிழக அரசு, ஜூன் 20-ஆம் தேதி முதல் மாம்பழக் கூழ் ஆலைகள் மாம்பழங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று அறிவித்ததுடன் ஒதுங்கி விட்டது. ஆனால், ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு நான்கு நாள்களாகியும் எந்த ஆலையும் மாம்பழங்களை சொல்லிக்கொள்ளும் வகையில் கொள்முதல் செய்யவில்லை. தமிழகத்தில் இதுவரை 40% அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனது தமிழக அரசு இனியும் துரோகத்தைத் தொடராமல் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்; விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 23, 2025
நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள்… pic.twitter.com/LEZdKbTzX7
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளைச்சல் குறைந்தால் உற்பத்தி செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல் நட்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும். கடுமையான உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற விளைச்சலும் கிடைத்த பின்னும் விவசாயிகள் வறுமையில் வாடி, பட்டினியாகப் படுத்துறங்க நேர்ந்தால் இந்த நாடு மாபெரும் பஞ்சத்தை எதிர்கொள்வதை எவராலும தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்; விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரியும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.