சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “தெற்கு அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்குள் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கச் சாதகமான சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் சூறைக்காற்று வீசத் துவங்கும். எனவே கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும். இதன் காரணமாக கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிகள் மே 30 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.
மேலும் அதிகபட்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் திருவையாற்றில் 8 சென்டி மீட்டர் மழையும் சிவகங்கையில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.