/indian-express-tamil/media/media_files/2025/01/31/anbik.jpg)
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் சார்பில், இயக்க வைர விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு நினைவு தேசிய பெருந்திரளணி, திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது. மணப்பாறை பொத்தமேட்டுபட்டி நேரு சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில் 24 மாநிலங்கள், 4 நாடுகளின் (இலங்கை, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா) சாரண, சாரணியா்கள் என பலர் கலந்துகொணடனர்.
பேரணியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதில், சாரண சாரணியா் தங்கள் மாநிலங்களின் கலாசார உடை அணிந்து, பேண்டு வாத்தியம் இசை முழங்க கோஷங்களை எழுப்பியவாறு ஆா்வத்துடன் பங்கேற்றனா். பேரணியில், இளைஞா்களின் எழுச்சி இந்தியாவின் வளா்ச்சி, தலைமைப் பண்பை வளா்ப்போம், நெகிழி தவிர்ப்போம், சுற்றுச்சூழல் காப்போம், ஒற்றுமை ஓங்குக, தேசம் காப்போம், சாரண சாரணியா்கள் சிக்கனமானவா்கள், சகோதரத்துவத்தை வளா்ப்போம், தேசப்பற்றை வளா்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்பாளா்கள் வலம் வந்தனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம், ரயில் நிலையம், புறவழிச்சாலை ஆகியவற்றை கடந்து திண்டுக்கல் சாலையில் உள்ள கருணாநிதி சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது. இதில், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார், சமூக நலத்துறை அரசு செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், பள்ளிக்கல்வித்துறை அரசு செயலா் மதுமதி, பாடநூல் கழக இயக்குநா் பொ.சங்கா், பெருந்திரளணி முதன்மை பேராணையா் அறிவொளி மற்றும் சாரணா் இயக்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறையினா், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.