பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீன்களுக்கான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதா அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரம் முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தொடங்கியது. 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த தனியார் தொழிற்சாலையில் இருந்து, திருச்சி மாநகராட்சிக்கு மாதம் 50ஆயிரம் ரூபாய் வாடகை வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோழிக்கழிவுகளை மீன்களுக்கான உணவாக மாற்றும்போது, அரியமங்கலம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தினசரி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுகளை சேகரித்து, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்புவதற்கு மூன்று ராட்சத கிணறுகள் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்குள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையில், நாய்களுக்கான கருத்தடை மையம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் செயல்பட்டு வருகிறது.
குப்பைகளை தரம் பிரிப்பதற்கான நுண்ணுரம் செயலாக்க மையம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் இயங்கி வருகிறது. விரைவில் மாடுகள் வதைக் கூடத்தையும் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்குள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி துவக்கியது. ஏற்கனவே கழிவுப்பொருட்களால் அரியமங்கலம், அம்பிகாபுரம், தீடீர் நகர் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வரும் நிலையில், கோழி கழிவுகளை கொண்டு மீனுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை கொண்டு வந்தால் மேலும் துர்நாற்றம் அப்பகுதியில் வீசும் என்பதால் பொதுமக்களின் அன்றாட நிம்மதி இழப்பு, சுகாதாரமற்ற சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக கோழி கழிவுகளில் இருந்து உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் கொண்டு வரக்கூடாது எனவும், அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள், தொகுதி அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முறையிட்டனர். சூழலை உணர்ந்து கொண்ட அமைச்சர் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையரிடம், உத்தரவிட்டதை தொடர்ந்து தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் அரியமங்கலம் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து அம்பிகாபுரம், அரியமங்கலம், திடீர் நகர் பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
க.சண்முகவடிவேல்