/indian-express-tamil/media/media_files/2025/08/01/udhayan-2025-08-01-23-10-33.jpg)
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு உரிமம், கூடுதல் பால் கையாளும் வகையில் திறன் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் முன்னிலை வகித்தார். இதில், பி.எம்.இ.ஜி.பி திட்டத்தில் 81 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்பில் 35 சதவீத மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடன்,
தாட்கோ திட்டத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 43 பேருக்கு 35 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தில் ரூ.71 லட்சம் மதிப்பில் கறவை மாட்டுக் கடன், 72 பயனாளிகளுக்கு ரூ.38.88 லட்சம் மதிப்பில் கறவை மாடு பராமரிப்புக் கடன், கூட்டுறவு சங்கத்தின் லாபத்தில் இருந்து 1,702 உறுப்பினா்களுக்கு ரூ.3.11 கோடி ஊக்கத்தொகை, 78 சங்கங்களுக்கு 44.72 லட்சம் மதிப்பில் பால் தரப்பரிசோதனை கருவிகள் என மொத்தம் ரூ.7.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு கொள்முதல் விலை ரூ.3 உயா்த்தப்பட்டது. தரமான பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு மேலும் ரூ.1 உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. பாலின் தரத்திற்கேற்ப விலை கிடைக்கச் செய்யும் வகையில் இயந்திரம் (acknowledgement machine ) வைத்து ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதல் விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த ஆண்டு ரூ.365 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்கள் சங்கங்கள் மூலம் 2 மைக்ரோ ஏடிஎம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூடுதலாக 16.50 லட்சம் லிட்டா் பால் கையாளும் திறன் கட்டமைப்புகள், 600 டன் தீவன உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள், 90 டன் பால் பவுடா் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாலுக்கான தொகை உற்பத்தியாளா்களுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலா் முத்துமாரி, துணைப் பதிவாளா் (பால்வளம்) நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.