மது விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் இல்லை. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது மட்டுமின்றி அனைத்துமே கூடுதலாக விற்பனையாகிறது என்று கூறியுள்ள அமைச்சர் முத்துச்சாமி, மது பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வலம் வரும் முத்தமிழ் தேர் ஊர்தி இன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதிக்கு வந்தது. இந்த ஊர்தியை பார்வையிட்ட அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு பகுதியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் மது பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், அமலாக்கத்துறை சோதனை செய்வது அவர்கள் வேலை இதனால் மக்களின் பணி எப்போதும் தடைபடாது. தீபாவளி மட்டுமல்ல அனைத்து பண்டிகை நாட்களிலும் மது கூடுதலாக விற்பனையாகிறது. இது திட்டமிட்டு செய்யப்படுவது அல்ல. தானா நடக்கிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவதும் என்றும் தெரியவில்லை. அதே சமயம் இந்த கேள்விகளுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
பணடிகை காலங்களில் சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள். மக்கள் மது பழக்கத்தை குறைத்துக்கொள்ளவும், அதில் இருந்து மீண்டு வரவும், அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வருவதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறிய அமைச்சர் முத்துச்சாமியிடம் பொங்கல் தினத்தில் மதுக்கடைகள் அடைக்கப்படுமா என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் பொங்கல் தினத்தில் பொங்கல் கொடுப்பீர்களா என்று கேட்டால் பதில் சொல்லலாம், மதுக்கடைகளை அடைப்பீர்களா என்று கேட்டால் என்ன சொல்வது, மதுக்கடைகள் குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனையாகளர்களுக்கு டார்கெட் கொடுக்கப்படுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் முத்துசாமியின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“