உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படு தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விழா பேருரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றைய நாளில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் கூட அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் தமிழை செம்மொழியாக அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான அரசாணை வழங்கப்பட்டது.
கலைஞர் முன்னெடுத்த இந்தி திணிப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நானும் பங்கு பெற்று சிறைவாசம் சென்றிருந்தேன். பேரறிஞர் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதன்படி தமிழக முதலமைச்சர் பல்வேறு வழிகளில் இந்த துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார், தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பிறப் மொழிகளின் ஆதிக்கங்கள் அதிகரித்து விட்டது.
வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியை விட ஆங்கிலம் போன்ற மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு 3-வது மொழியையும் திணிப்பதற்கு துடித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் நம்முடைய தமிழ் மொழிக்கான போராட்டம் தொடங்கியுள்ளது. நம்முடைய தாயை எவ்வளவு மதிக்கிறோம் அதனை விட நம்முடைய தாய் மொழியை நாம் மதிக்க வேண்டும். நம்முடைய தாய்மொழியை பாதுகாப்போம். பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் கோவை மாநகராட்சி மேயர் துணை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.