Tamilnadu Ration Card Update : தமிழகத்தில் திமுக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப அட்டையில் குடும்ப தலைவி பெயர் இடம்பெற வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் சாரங்கபாணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து தற்போதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், குடும்ப அட்டையில் குடும்ப தலைவி புகைப்படம் இருந்தால் மட்டுமே இந்த ஊக்கதொகை வழங்கப்படும் என்று தகவல்கள் பரவியது.
இதனால் குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம் உள்ள நபர்கள், தங்களது அட்டையில் குடும்ப தலைவி புகைப்படத்தை மாற்றித்தரக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முதல் ஆன்லைன் வரை அனைத்து தரப்பிலும் மனுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் உடனடியாக பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி இடைத்தரகர்கள் சில பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. அரசு அதிகரிக்கள் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று கூறினாலும் மக்கள் தரப்பில் மனுகள் குவிந்த வண்ணமே உள்ளது.
இதனால் அரசு தரப்பில் இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில். குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயர் மாற்ற வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கொரோனா தொற்றில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 14 வகையான மல்லிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4000 ரூபாய் நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவிகளின் பெயர் இடம்பெற வேண்டுமா? அல்லது குடும்பதலைவியின் புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து மக்கள் யாரும் அச்சமடைய வேண்டும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நியாயவிலை கடைகளில் அரிசி குறித்து எழுந்த புகார் தொடர்பாக பேசிய அவர், கடைகளில் வந்தடைந்த தரமற்ற அரிசிகள் திரும்பப் பெறப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் ரேசன் கடைகளுக்குச் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.