கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை துவக்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறுகையில, இன்று 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் 415 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற கூடுதலாக ரூபாய் 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் டெண்டர் விடப்படும். மீதம் 100 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும் தொடங்கப்பட்டுள்ளது.
மூன்றரை ஆண்டுகளில் கோவை மாநகராட்சி வரலாற்றில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இவ்வளவு நிதிகளில் சாலைகள் அமைத்தது இதுவே முதல் முறை. வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அவினாசி சாலை மேம்பாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் அமைப்பது என முழுமையாக பணிகளை செய்து வருகிறோம்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்று பார்க்காமல் நிறைவேற்றி வருகிறோம். அரசு நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, முதல்வர் அந்த திட்டங்களை அறிவித்தது நிதியை ஒதுக்கினார். கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார். கோவை மாவட்டத்தில் திட்ட அறிவிப்புகளாக பார்க்காமல், பணிகள் தொடர்பாக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
ஈரோடு வந்தபோது விமான நிலையத்திலேயே மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை அழைத்து பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி பணிகளை விரைவுபடுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து கேள்வி எழுப்புவதற்கு, இன்று சண்டே (Sunday) வேலை இருக்கா இல்லையா என நகைப்புடன் பதில் அளித்து புறப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“