க.சண்முகவடிவேல்
திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது அனைத்து சுங்ககச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்ததால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையில் சுங்கச்சாவடி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம், சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மீதம் உள்ள ஊழியர்கள் அந்தச் சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தால் அந்த சுங்கச்சாவடியை கட்டணமின்றி வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மேலும் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போலீஸாரும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் இன்று காலை நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்று மாலை தொழிலாளர் நல ஆணையர் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil