/tamil-ie/media/media_files/uploads/2023/02/Modi-Udhayanithi.jpg)
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் படங்களில் நடித்து வந்த உதயநிதி அமைச்சரான பின் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தற்போது 2-நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழகத்தின் முன்னாள் ஆளுனரும், தற்போதைய பஞ்சாப் ஆளுனருமான பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், கிரிராஜ் சிங் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், நாளை (பிப் 28) காலை 10.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.