வீட்டில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அரசு பங்களாவில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் என்று இருந்த உதயநிதி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்,.ஏ. ஆனார். அதன்பிறகும் படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் விளைாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய உதயநிதி அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தங்களது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முதல்வரின் முகாம் மற்றும் அலுவலகம் இந்த வீட்டில் இருப்பதால் தினமும் அவரை பார்க்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.
இதனிடையே தற்போது உதயநிதியும் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால், அவரை பார்க்கவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என தினமும் பலர் வந்து செல்கின்றனர். இதனால் அந்த வீட்டில் போதுமான இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உதயநிதி சென்னை அடையாற்றில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த பங்களாவில் வசித்து வந்த சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் மலரகம் பங்களாவுக்கு குடியேறிய நிலையில், காலியாக உள்ள குறிஞ்சி பங்களா தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் முடிந்த பின் உதயநிதி அங்கு குடியேறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“