New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/01/Hl5Q54bQ03Cj7Efk8P95.jpg)
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்துள்ள புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தகவல்கள், கடந்த சில நாட்களாக இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து தி.மு.க. எம்.பி கனிமொழி பத்தரிக்கையாளர் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அந்த வகையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுககு தடை விதிக்க வேண்டும் என்று சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 28) இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான், போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த விசாரணை முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமான், வழக்கமான கேள்விகள் தான் கேட்கப்பட்டது. புதிதாக ஒன்றும் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சீமான், பெண்கள் குறித்து அவதூறான பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தி.மு.க. எம்.பி கனிமொழி, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது அவரிடம், பெரியார் பற்றி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாததால் தான் தற்போது நடிகை விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சீமான் கூறியுள்ளார் இது குறித்து கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி, இதை விட பெரியாரை, கேவலப்படுத்த முடியாது. இதற்கு நான் பதில் சொல்லும் அளவுக்கு இது தகுதி வாய்ந்த விஷயமே அல்ல என்று கூறியுள்ளார். அடுத்து சீமான் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசுவது குறித்து கேட்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் இது குறித்து கேட்க வேண்டும். பெண்களை கேவலமாக பேசுவதை எப்படி அவர்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.