Tamilnadu news in tamil: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் கடந்த 15-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் சென்னை உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை (TAEI) வார்டில் தினமும் சுமார் 30 அறுவை சிகிச்சை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் நேற்று செவ்வாயன்று, 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 70% மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"குடி போதையில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்கள் அதிகமாக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அதில் சிலர் தண்ணீர் என நினைத்து ஃபீனைலை குடித்துள்ளனர். மேலும் குடித்து விட்டு வீட்டுப் பெண்களை தாக்கியுள்ளனர். எனவே சில பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஸ்டான்லி TAEI வார்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சாலை விபத்துக்களில் உயிரிழந்த நிறைய வாகன ஓட்டிகள் குடிபோதையில் காணப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில், அவை கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 5 அல்லது 6-க்கும் குறைவாகவே இருந்துள்ளது. இதன் விளைவாக, பெருநகர சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் (ஜி.சி.டி.பி) வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வழக்கமான சோதனைச் சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த திங்களன்று குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 30 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகமான சோதனைச் சாவடிகளை எங்கு அமைப்பது, வாகனங்களை பறிமுதல் செய்தல் மற்றும் தடுத்து வைப்பது போன்றவற்றைப் பற்றி போக்குவரத்து காவல்துறை வியூகம் வகுத்து வருகிறது.
இருப்பினும், "இரத்ததில் உள்ள ஆல்கஹால் உள்ளடக்கத்தை சரிபார்க்க ப்ரீதலைசர்களைப் பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகளுடன் மிக நெருக்கமாக இருக்க வேண்டாம் என்று போலீசாருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். தற்போது, இதுபோன்ற சோதனைகளின் போது உடல் ரீதியான தொலைவு மற்றும் பிற கோவிட் -19 பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்காக காவல்துறையினர் ஒரு நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) வரைவு செய்கின்றனர். இது தொடர்பாக அண்டை மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்று ஜி.சி.டி.பி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“