Tamilnadu news in tamil: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் ஏஜி பொன் மாணிக்கவேல். இவரது பதவி காலத்தில் தாக்கல் செய்த அறிக்கைகள் குறித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் தான் ஒரு பத்திரிகையாளர் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பத்திரிகையாளர் எனக்கூறி வழக்கு தொடர்ந்தவர் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு சேகர்ராம் காணொலியில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ‘ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை, 3 மாதங்களில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதை தவிர்த்து, மேலும் சில உத்தரவுகளையும் பிறப்பித்த நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்திய பிரஸ் கவுன்சில் அமைக்க, மத்திய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார். மாநில அளவில் பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டம் உள்ளதா?’ என, முதல் பெஞ்ச் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, இந்திய பிரஸ் கவுன்சில் வழக்கறிஞர் மற்றும் பிற வழக்கறிஞர்களும் தெரிவிக்கும்படியும் முதல் பெஞ்ச் நீதிபதிகள் அறிவுறுத்தினர். ‘சட்டம் இன்றி பிரஸ் கவுன்சில் அமைக்க முடியாது; சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட முடியும்’ என தெரிவித்த முதல் பெஞ்ச் நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“