/indian-express-tamil/media/media_files/2025/03/25/jRCltsGCHY8kHUcIAiyD.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 05, 2025 21:45 IST
செல்வப்பெருந்தகையின் குரல் மு.க. ஸ்டாலினின் குரலாக மாறிவிட்டது - அண்ணாமலை விமர்சனம்
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் பேச்சு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குரலாக மாறிவிட்டதாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “எப்படி இருந்த காங்கிரஸ் பேரியக்கம் இப்படி ஆகிவிட்டது என நான் வருத்தப்படுகிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல், முதலமைச்சர் ஸ்டாலினின் குரலாக மாறிவிட்டது” என்று கூறினார்.
- Sep 05, 2025 21:39 IST
சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; ரயில் நிலையங்களில் தீவிர சோதனை
கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு இன்று (செப். 5) மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, சிரித்துக்கொண்டே மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் விரைந்து வந்து சென்னை முழுவதும் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின் மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 05, 2025 21:17 IST
எழும்பூரில் பராமரிப்பு பணி: 4 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை, எழும்பூரில் இருந்து வழக்கமாகப் புறப்படும் மலைக்கோட்டை, சோழன், பாண்டியன் மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
- Sep 05, 2025 21:13 IST
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் - இ.பி.எஸ் உறுதி
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைக்கு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நிரந்தர தீர்வு காணப்படும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தி.மு.க.வுக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். ஆனால், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், இந்த நீண்டகால பிரச்சனையான முல்லைப்பெரியாறு அணைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என்று உறுதியளித்தார்.
- Sep 05, 2025 20:06 IST
3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு - உயர்நீதிமன்றம் ஆணை
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்றும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு அது ஆதரவாகவே அமையும் எனவும் கூறி மூன்றாவது பிரசவத்திற்காகவும் மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவர் தனக்கு மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு கோரியிருந்தார். இந்த விடுப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு பெண்ணுக்கு மூன்று முறை மகப்பேறு விடுப்பு வழங்குவதை ஒரு முறை மட்டுமே வழங்கலாம் என்ற விதியை எதிர்த்து ரஞ்சீதா தொடர்ந்த வழக்கில், மூன்றாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
- Sep 05, 2025 20:03 IST
பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் - ராமதாஸ் கண்டனம்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தஞ்சை ஆடுதுறை பா.ம.க வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலினின் அலுவலகத்தில் இருந்தபோது, வெடிகுண்டுகள் வீசி கொலை செய்ய நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். அதேபோல், ம.க.ஸ்டாலினுக்குத் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
- Sep 05, 2025 18:48 IST
7 வி.ஐ.பி.,களுக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை - அரசாணை வெளியீடு
குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்
- Sep 05, 2025 17:51 IST
ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
2வது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது
- Sep 05, 2025 17:47 IST
ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக மும்பை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது
- Sep 05, 2025 17:14 IST
3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது - ஐகோர்ட்
உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் கர்ப்பிணி பெண்ணின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- Sep 05, 2025 17:09 IST
இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் - டிரம்ப்
இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. 3 நாடுகளும் வளமான, நீண்ட எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும் என எஸ்.சி.ஓ மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒன்றாக இருக்கும் படத்தை வெளியிட்டு, ட்ரூத் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்
- Sep 05, 2025 16:42 IST
நெல்லையில் புதிய விண்வெளி மையம் - இஸ்ரோ
குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
- Sep 05, 2025 16:18 IST
ஆடுதுறையில் பாமகவினர் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி, சாலைகளில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் ஆடுதுறை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- Sep 05, 2025 15:31 IST
அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதாக வழக்கு!
அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ரூ.5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸ்க்கு, சட்டபூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
- Sep 05, 2025 14:57 IST
இன்று (செப்.05) கன மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறையில் இன்று (செப்.05) கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Sep 05, 2025 14:55 IST
பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ₹.274.41 கோடி வருவாய்
ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான நேற்று (செப்.04) கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ₹.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிதியாண்டில், கடந்த 30.04.2025 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு ₹.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
அமைச்சர் மூர்த்தி
- Sep 05, 2025 14:53 IST
பாமக பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. திங்கள்கிழமை காலை சுமார் 11 மணியளவில், கும்பலாக வந்த சிலர், ஆடுதுறையில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பேரூராட்சித் தலைவர் உயிர்தப்பினார். ஆனால், அவரது ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வீசப்பட்டதில் அலுவலகக் கதவுகள் சேதமடைந்து, ரத்தம் சிதறிக்கிடக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 05, 2025 14:37 IST
போக்சோ வழக்கில் விதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு போக்சோ வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. பிளஸ் 2 படிக்கும்போது காதலித்த இருவரும் பாலியல் உறவு கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அப்போது, அந்தப் பெண் தரப்பில், "நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம். அவரைச் சிறைக்கு அனுப்பினால் நானும் என் குழந்தையும் நிராதரவாக விடப்படுவோம்" என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் வழங்கிய 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
- Sep 05, 2025 14:18 IST
ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு
முதல்வரின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மின் வாகன உற்பத்தி உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் லண்டனில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்தித்தார்.வி.எஸ்.டி (VST) குழும நிறுவனத்துடன் ரூ. 5,000 கோடி முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜெர்மனியில் ரூ. 176 கோடி முதலீட்டில் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தனது மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
- Sep 05, 2025 14:18 IST
ரசாயனப் புகை வெளியேற்றம்
கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் இரசாயனத் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் இருந்து வெளியேறிய இரசாயனப் புகையால் 75-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடலூர் - சிதம்பரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- Sep 05, 2025 14:17 IST
டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநரை தாக்கிய வடமாநில இளைஞர்
திருப்பூர்: பள்ளகவுண்டம் பாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநரை, வடமாநில இளைஞர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. டிக்கெட் எடுக்காமல் பயணித்ததைக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துநரை அவர் தாக்கியதாகவும், பதிலுக்கு ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அந்த இளைஞரை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- Sep 05, 2025 13:57 IST
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் என்பதால் அதிகம் கருத்து கூற முடியாது: பிரேமலதா விஜயகாந்த்
செங்ககோட்டையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு, 10 நாட்கள் கெடு வைத்துள்ளது குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையாக இருந்தால் வரவேற்போம். இருப்பினும் அதிமுக உட்கட்சி விவகாரம் என்பதால் அதிகம் கருத்து கூற முடியாது என்று கூறியுள்ளார்.
- Sep 05, 2025 13:56 IST
பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணிக்கு தமிழக மக்கள் கெடு வைத்துவிட்டார்கள்: செல்வபெருந்தகை
பா.ஜ.க. அ.தி.மு.க கூட்டணிக்கு தமிழக மக்கள் கெடு வைத்துவிட்டார்கள் என்பதால், ஒ.பி.எஸ். டி.டி.வி வெளியில் வந்துவிட்டார்கள். இன்று செங்கோட்டையனும் பேசிவிட்டார். அது மூழ்கும் கப்பல் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
- Sep 05, 2025 09:27 IST
ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் படம் திறப்பு
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியாரின் திருவுருவ படம் திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- Sep 05, 2025 09:25 IST
லாட்டரிக்கு உடந்தை - 6 காவலர்கள் சஸ்பெண்ட்
கடலூரில் லாட்டரி சீட்டு வியாபாரியிடம் பணம் பெற்று கொண்டு விற்பனை செய்ய அனுமதித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- Sep 05, 2025 09:24 IST
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்கலாம் - மத்திய அரசு அனுமதி
2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்கு முன் உரிய ஆவணங்களின்றி இந்தியா வந்து பதிவு செய்த இலங்கை அகதிகள் சட்டபூர்வமாக தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இயற்றிய குடியேற்ற மற்றும் வெளிநாட்டவர் சட்ட விதிகளின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.