திருச்சி திருவெறும்பூரில் இன்று மாலை நடைபெறவிருக்கும் மணியரசன் 75-வது வயது நிறைவினையொட்டி நடைபெறும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்ற வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுத்தும். இவர்கள் ஆட்சியாளர் இல்லை இவர்கள் வரி என்ற பெயரில் இருக்கிறார்கள். இது மாறி மாறி தான் நடைபெறும்.
பாஜக ஆட்சியில் சாதனை என்று சொல்ல முடியாது, நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளை தான் விளக்கிப் பேச வேண்டும். அதானியை வளர்த்து விட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள். எந்தத் துறையிலும் ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருடைய ஆட்சி அவர்கள் என்ன வேணாலும் செய்வார்கள்.
கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார். இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை. தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள், அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். வரும் செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில், அதனை தற்போதிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.
நாட்டைக் காப்பாற்ற எல்லையில் நிற்கும் வீரருக்கு தன் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ பதிவு செய்தது வேதனை அளிக்கிறது. இப்படி இருந்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் எப்படி ராணுவத்தில் சேர விரும்புவார்கள். ஆளுநர் இதையெல்லாம் எங்கு கவனிக்க போகிறார் அவருக்கு இது இல்லை வேலை. ஆளுநருக்கு பாஜக அரசு கொடுத்த வேலையை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார். மாநிலங்களுக்கென்று ஏதும் செய்யவில்லை, அவர் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே தொடர்ந்துக் கொண்டிருக்கின்றார்.
ஆளுநர் ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. மாநிலங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்று ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். நீண்ட வருடங்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்யமாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்யமாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தச்சந்திப்பின்போது திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் திரளாக கலந்துக்கொண்டு சீமானை வரவேற்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil