எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்க பணிகள் குறித்து நடத்தப்ப்ட கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசிய நிலையில், எங்களுக்கு வாழ்வாதாரம் முக்கியம், சீமானே கிளம்பு என்று கூட்டத்தில் இருந்து கோஷம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, மனச்சான்றோடு பேசுகிற யாராவது வாருங்கள் அனல் மின் நியத்தின் அருகிலே பயணித்து போவோம். அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் உலர் சாம்பல் பரவி மூடி அந்த நிலம் எவ்வளவு நாசமாக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.
நீர், உணவு, காற்று எல்லாம் நஞ்சாகிவிட்டபிறகு, விளக்கை வைத்துக்கொண்டு வெளிச்சத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்? பிணத்தை வைத்துக்கொண்டு அழலாம். தாயின் மார்பில் பால் குடிக்கலாம். அது இயற்கை, இயல்பு எதார்த்தம், மார்ப்பை அறுத்து ரத்தம் குடிப்பதை வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்று கட்டமைப்பதை எப்படி நீங்கள் ஏற்கிறர்கள்? 100 பேர் மரணித்தால், 90 முதல் 99 பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள். காரணம் என்ன? 3 வயது குழந்தைக்கு புற்றுநோய் வர காரணம் என்ன?
அனல்மின் நிலையம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற பெருமக்களிம் ஒன்று மட்டும் சொல்கிறேன். இந்த அனல் மின்சார விரிவாக்கம், உலர் சாம்பல், இதெல்லாம் பாதுகாப்பானது தான். அதையும் தாண்டி வேலை வாய்ப்பும் சம்பளமும் தான் முக்கியம் என்று கருத்து சொல்லும் மக்களே உங்கள் வீட்டை அந்த அனல்மின்நிலையத்திற்கு அருகில் கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் வாழும் வாழ்விடத்தில் எங்களுக்கு வீட்டை கொடுங்கள். வேறு ஒன்றும் இல்லை.
காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகிய எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்க காரணம் என்ன? சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஏன் அரசு செய்யவில்லை? யாராவது பதில் சொல்லுங்கள் என்று பேசியுள்ளார்.
சீமான் பேசும்போது, எங்களுக்கு வாழ்வாதாரம் முக்கியம் சீமானே வெளியேறு என்று கூட்டத்தில் இருந்து கோஷங்கள் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கருத்து கேட்பு என்று சொல்லி கண்துடைப்புக்கு நடத்துகிறார்கள். தி.மு.க ஆட்களை அழைத்துக்கொண்டு வந்து எதிர்ப்பு கோஷம் போடுவதாக சீமான் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“