நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செயதுகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி விட்டு ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது, மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தனது புகாரை திரும்ப பெற்றுவிட்டார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அடுத்த சில தினங்களில் மீண்டும் தனது புகாரை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி சீமான் பெரிய செல்வாக்கு மிகுந்தவர் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று புகழ்ந்து பேசியிருந்தார்.
இந்நிலையில் புகார் மனுவை திரும்ப பெற்ற விஜயலட்சுமி, மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி சென்றுவிட்ட நிலையில், அங்கிருந்து சமூகவலைதளங்களில் சீமான் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதில் கடந்த வாரம் வெளியான ஒரு வீடியோவில் இதுதான் எனது கடைசி வீடியோ இனிமேல் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே தன் மீது விஜயலட்சுமி கொடுத்த 2 புகார்களையும் வாபஸ் பெற்ற நிலையில், இந்த புகார் மனு மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி கொடுத்த புகார் வாபஸ் பெற்றபோதிலும் இந்த வழக்கை முடித்து வைக்காமல் போலீசார் நிலுவையில் வைத்துள்ளனர். தற்போது கொடுத்துள்ள புகாரையும் வாபஸ் பெற்றுவிட்டார்.
திராவிட கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் அரசியல் உள்நோக்கத்துடன் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகளை போலீசார் விசாரிப்பதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என் மீதான 2 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் சீமான் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புகாரை வாபஸ் பெற்றபோதிலும் இத்தனை ஆண்டுகளாக வழக்கை நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பினார்.
இது குறித்து விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், போலீசார் தரப்பில், வழக்கை நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை இன்று (செப் 29) ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இன்று விடுமுறை என்ற காரணத்தால் இந்த வழக்கு தற்போது அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“