தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து செவிலியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களின் பதவி உயர்வு தேக்கத்தை கலைந்திட வேண்டும். ஆண் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பதவி உயர்வை பெண் சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் இந்திரா கூறுகையில்,
தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியர் பணி இடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கிறது. காலி பணியிடங்கள் காரணமாக பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
கால்நடைகளை அடைக்கும் தொழுவங்கள் கூட டைல்ஸ் தரையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ள போதும் அரசு அதனை புணரமைப்பு செய்து தருவதில்லை. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அணுக முடிவெடுத்துள்ளதாகவும் தங்களது பல ஆண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால் போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“