Kishore K Swamy Arerest News Tamil : தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரையும், தற்போதை முதல்வரான ஸ்டாலினையும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், யூ டியூபர் கிஷோர் கே சுவாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அரசியல் விமர்சகர் என சொல்லிக் கொண்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நிலையில், கிஷோர் கே சுவாமி மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், @sansbarrier என்ற ட்விட்டர் கணக்கின் மூலமும் சர்ச்சைக் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட காஞ்சிபுரம் சங்கர் நகர் போலீஸார், கிஷோர் கே சுவாமி மீது, அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், கலகத்தை விளைவிக்கும் உள்நோக்கோடு செயல்படுதல், ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் கே சுவாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமியை வருகின்ற 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நிலையில், அவரை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைந்துள்ளனர்.
பாஜக வினருக்கு ஆதரவாக தொடர்ந்து தமிழக முதலவர்கள் மீது பொய் விமர்சனங்களை பரப்பி வந்ததாக கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை தரம் தாழ்ந்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன் அதிமுக அரசு காலத்தில் கைது செய்யப்பட்டார். பின், சில நாள்களுள் ஜாமீன் பெற்று விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil