Tamilnadu News Update : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் தொற்று இந்திய உட்பட சுமார் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. டெல்டா வைரஸ் தொற்றை விட வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ நெருங்கி வருகிறது.
இந்த வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடற்கரைகள் மற்றும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பப்கள் போன்ற பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சி சைலேந்திர பாபு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் பயணிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், புத்தாண்டு தினத்தன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் என்றும் கூறியுள்ள அவர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புக்காக போலீசார் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள உணவகங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 11 மணி வரை நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவக நிர்வாகிங்கள் தங்களது ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
புத்தாண்டு இரவு சென்னையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி :
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள கிரேட்டர் சென்னை காவல்துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் சென்னை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படாது. இதனால் பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதே சமயம் மக்கள் வழிபாட்டிற்காக கோவில்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் நடந்துகொள்ள வேண்டும். மேலும் அசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல்களை கோயில் நிர்வாகங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் அவசர உதவி தேவைப்பாட்டால், 100 அல்லது 112க்கு அழைக்கலாம் காவல் செயலியான ‘காவலன்-எஸ்ஓஎஸ்’ஐயும் பயன்படுத்தலாம். இதற்கிடையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, ஆனால் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil