தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அதிமுக முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுகவில் கூட்டணி கட்சிகள் குறித்து பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் உதயசூரியன்சினத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்பந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் தற்போது இந்த பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கேஎஸ் அழகிரி, கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேஎஸ் அழகிரி மேலும் கூறுகையில்,
மத சார்பின்மை பேசும் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும். வரும் தேர்தலில், வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும். மதச்சார்பு இல்லை என்று பேசி வரும் கமல்ஹாசன், அவர் தனியாக பேசுவதை விட, ஏற்கனவே மதச்சார்பின்மை கூட்டணியாக இருக்கும் எங்கள் கூட்டணிக்கு வந்து அவர் பேச வேண்டும். எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன். கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும்.
கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்க கூடாது என நினைக்கிறோம். மக்கள் நீதி மய்யம் கட்சி. கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது. எங்கள்கூட்டணியில் உள்ள தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கை, எங்கள் கொள்கையில் வேறுபாடு உண்டு. 12 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது. காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் வளர்ச்சிக்கு நாட்டை எடுத்துச்செல்லும் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"