Kamal Haasan Meet Rajinikanth in Boise Garden : தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்திலோ சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 1969-ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகிறனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கடந்த காலங்களில் தேசிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் பெரும் முயற்சி செய்த்து. ஆனால் அவர்களால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிவில்லை.
ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா இறப்புக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பிய நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த சூட்டோடுகடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கனிசமான வாக்குகள் பெற்றனர். அந்த நம்பிக்கையில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்று கமல் அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நடிகர் கமல்ஹாசன், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் புதிய ஆட்சி கொண்டு வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே நேற்று கமல்ஹாசன் தனது நண்பரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ரஜினி கமல் இருவரும் 40 ஆண்டுகால நட்பை பாராட்டும் விதமாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும், இந்த சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருந்தால் கமல் கட்சி நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணி அமைய வாய்ப்புகள் கூடி வருகிறது. திமுகவில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களுடன் வந்து சேரலாம். நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும். சீமான் சரத்குமார் எங்களிடம் சேரலாம். கதவுகள் திறந்தே உள்ளன என்று கூறினார். நேற்று ரஜினியுடன் நலம் விசாரித்ததோடு சரி. அரசியல் குறித்து அவரிடம் ஏதும் பேசவில்லை. வாய்ஸ் கொடுக்க நினைத்தால், ரஜினிதான் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"