தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த மின்கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு? ‘சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை. சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்து கொண்டே இருக்கிறீர்கள்.
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி,
மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. மின் கட்டணம் உயர்ந்தால் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தான்.
நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை 1 முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது 400 யூனிட் வரை ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்வு, 401 -500 யூனிட் வரை ரூ. 6.15 லிருந்து ரூ.6.45 ஆக உயர்வு, 501-600 யூனிட் வரை ரூ.8.15- ரூ.8.55 ஆக உயர்வு, 601-800 யூனிட் வரை 9.20-9.65 ஆக உயர்வு, 801-1000 யூனிட் வரை 10.20 -10.70 ஆக உயர்வு, 1000 யூனிட்டிற்கு மேல் ரூ.11.25 - ரூ.11.80 ஆக உயர்வு மற்றும் வணிக பயன்பாடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி உயர்த்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் மற்றும் தொழில் துறையும் நலிவடையும். எனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பானது மக்களின் மன நிலைக்கு எதிரானது.
தமிழகத்தில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமாக திமுக ஆட்சி செய்வது தான் திராவிட மாடல். ஏற்கனவே சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என்று மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசின் திராவிட மாடல் மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்கள் மீது மீண்டும் பொருளாதார சுமையை ஏற்றும்.
எனவே தமிழக அரசு, உயர்த்தி அறிவித்திருக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“