பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி உப்பளம் தொகுதி அதிமுக சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்யாத ஆளும் பாஜக கூட்டணி அரசை கண்டித்தும், செயல்படாத தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் அதிமுக மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில் இன்று உப்பளம் தொகுதியில் சுப்பையா சாலை - வாணரப்பேட்டை சந்திப்பு, அம்பேத்கர் சாலை - உப்பனாறு பாலம், செஞ்சி சாலை– சோனாம்பாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
மறியல் போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன் கூறுகையில்,
உப்பளம் தொகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏற்கனவே நல்ல முறையில் போடப்பட்ட சாலைகளை தனியார் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக சாலைகள் முழுவதும் நான்கு அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி நன்றாக இருந்த சாலைகளை நாசமாக்கி விட்டனர் தற்போது உப்பளம் தொகுதியில் உள்ள சுப்பையா சாலை, செஞ்சி சாலை, மெயின் ரோடு, டாக்டர் அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதால் மக்கள் தினசரி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
டாக்டர் அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பல அகலமான சாலைகள் தனியார் மின் உபயோகத் திட்டத்திற்காக ஆங்காங்கே தோண்டப்பட்டும், பல சிமெண்ட் பில்லர்கள் அமைத்து கட்டுமான பணிகள் செய்ய அனுமதித்துள்ளதால் சாலை அகலமே குறுகி மக்கள் பயன்பாட்டிற்கு இடைஞ்சலாக மாற்றப்பட்டுள்ளது. உப்பளம் தொகுதி முழுவதும் போடப்பட்ட சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டால், தோண்டப்பட்ட பகுதி ஒன்றிரண்டு மாதத்திற்குள் சரி செய்யப்படும்.
ஆனால் தற்போது உள்ள திமுக சட்டமன்ற செயல்படாத பொறுப்பற்ற, அக்கறையில்லா தன்மையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தோண்டப்பட்ட எந்த சாலையும் மீண்டும் செப்பனிடப்படவில்லை. இது போன்ற விஷயத்தில் மலிவு விளம்பர அரசியல் செய்ய அதிமுகவிற்கு விருப்பமில்லா காரணத்தினால் அமைதி காத்து வந்தோம்
மக்களின் நலுனுக்காக இன்று காலை சுப்பையா சாலையிலிருந்து வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையான செஞ்சி சாலையிலும், சுப்பையா சாலையில் இருந்து நேத்தாஜி நகர்கள். தமிழ்தாய் நகர் ராசு உடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம் கோலாஸ் நகர், அவ்வை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் டாக்டர் அம்பேத்கர் சாலையிலும் சுப்பையா சாலையிலிருந்து தாவீது பேட்டை, வாணரப்பேட்டை இந்திரா நகர் காளியம்மன் கோவில் தோட்டம், ஜெயராம் செட்டியார் தோட்டம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாணரப்பேட்டை மெயின் ரோட்டிலும் அதிமுக சார்பில் மூன்று இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் வீரசெல்வம், ஸ்மார்ட் சிட்டி அதிகாரி முரளி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களிடம் தாங்கள் குறை கூறும் பணிகளை ஒருவாரத்திற்குள் முடிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசு துறைகள் சாலைகளை உடனடியாக செப்பனிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலுவலகத்திற்கு முன்பு 10 தினங்களுக்கு பிறகு அதிமுக சார்பில் மக்களை திரட்டி அரசு மூலம் பழுதாக்கிய சாலைகளை செப்பனிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil