குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் விதியில் திருத்தம்; தொல்லியல் தளங்களுக்கு ஆபத்து: பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை
காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குவாரிப்பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்லியல் தளங்கள் பாதுகாக்கப்படும் என கடந்த ஆண்டு அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தொல்லியல் தளங்களில் இருந்து 500மீ தொலைவிற்குள் குவாரிப்பணிகளுக்கு அனுமதியோ குத்தகையோ வழங்கக் கூடாது என 3.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
Advertisment
இந்நிலையில், காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கியதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கி.மீ. தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டுதான் இதற்கான தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலக்களிப்பது விபரீதமான முடிவாகும்.
தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளில் இருந்து பெருமளவிலான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு சில குவாரி முதலாளிகளின் நலனுக்காக இயற்கை பாதுகாப்பில் சமரசம் செய்வது கண்டனத்திற்குரியது.
எந்தவித ஆய்வுகளும், அறிவியல்பூர்வ பார்வையுமின்றி துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காடுகளின், பசுமைப் பரப்பின் அளவை அதிகரிக்க இந்தியாவிலே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு இந்த அரசாணை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால் தமிழக முதல்வர் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தொல்லியல் துறை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முழு வீச்சில் சிறப்பாக இயங்கி வரும் நிலையில் தொல்லியல் சின்னங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெளியான இந்த அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“