Tamilnadu Ration Card Update : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு பெண்களை முன்னேற்றத்தை மையமாக வைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதில் குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1000 ஊக்கதொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஆவின்பால் விலைக்குறைப்பு ஆகிய திட்டங்கள் முக்கிய அம்சமாக பார்க்கபடுகிறது.
இதில் அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் ஆவின்பால் விலைக்குறைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனறு அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்கட்சிக்கள் முதல் ஊடகங்கள் வரை அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முதல்வர் நிதி நிலையை கருத்தில்கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை உரிய நேரத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்'' என்று கூறியிருந்தார். தொடர்ந்து இன்று செய்தியளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ''தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்'' என கூறியுள்ளார்.
தற்போதுவரை இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இத்திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகள் எல்லோருக்கும் ரூ.1000 உரிமை தொகை கிடைக்குமா? இந்த திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்று பொதுமக்களிடையே பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகள் பெயர் மட்டுமின்றி புகைப்படமும் இருந்தால் மட்டுமே ரூ. 1000 ஊக்கத்தொகை கிடைக்கும் என் தகவல் பரவி வருவதால், ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படம் உள்ள பலரும் தங்களது ரேஷன் கார்டுகளில் புகைப்படத்தை மாற்றிக்தரக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்பதால், முறையாக அறிவிப்பு வரும் வரை குடும்ப தலைவிகள் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படியேனும் ரேஷன் கார்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டியது கட்டாயம் என்ற நிலை வந்தால் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ள வசதி உள்ளது.
ஆன்லைன் முறையில் புகைப்படம் மாற்ற வழிமுறைகள்:
அரசின் அதிகாரபூர்வ இந்த https://www.tnpds.gov.in வலைத்தளத்துக்கு சென்று
பயனாளர் நுழைவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து காட்டப்படும் பக்கத்தில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவிட்டு, கீழே இருக்கும் கேப்ட்சா குறியீடை சரியாக கொடுத்துவிட்டு பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் செல்போன் எண்ணுக்கு கிடைக்கும் ஒடிபியை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
இப்போது தோன்றும் பக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் என்பதை தேர்வு செய்தால், குடும்ப தலைவர் பெயர் உட்பட உறுப்பினர்களின் பெயர்கள் காண்பிக்கப்படும்.
இதில் குடும்ப தலைவர் பெயரில் மற்றும் புகைப்படத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அட்டை பிறழ்வுகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் புதிய கோரிக்கை என்பதை தேர்வு செய்து குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம் என்பதை கிளிக் செய்து புகைப்படம் மற்றும் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம். அனைத்தையும் சரியாக முடித்த பின்னர் ஓகே கொடுத்தால் உங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உங்களது ரேஷன் அட்டையில் குடும்ப தலைவரின் பெயர் மாற்றப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil