சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்தில் பெற்றோர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து மரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்து இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை முத்துலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 9 மாத நரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கோவையில் வேலை செய்து வரும் ராஜதுரை, சேலத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார். பேருந்தில் ராஜதுரை தனது மனைவி மற்றுமு் குழந்தைகளுடன் நடத்துனரின் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
பேருந்தில் ராஜதுரை தனது மகனை தனது தோளில் வைத்து தூங்க வைத்துள்ளார். இதனிடயே, பேருந்து, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால், இருக்கையில் இருந்த ராஜதுரை நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவர் தோளில் இருந்த குழந்தை நரணிஷ் நழுவி பேருந்தின் முன்பக்க கதவு வழியாக சாலையில் விழுந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், டிரைவரு உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
சாலையில் தவறி விழுந்த குழந்தை நரணிஷ், படுகாயமடைந்த நிலையில், குழந்தையை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தை நரணிசை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும்பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.