நடப்பாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் குறைந்தாலும், மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று மதியம் 12 மணி முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.42 டிஎம்சியாகவும் உள்ளது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று இரவு முதல் அதிகரித்து வருகிறது. இதனால், அணை முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்டிள்ளது. எனவே, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது நான்காவது முறையாகும். கடந்த ஆண்டு ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 31 ஆம் தேதியும் அணை முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்