திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வேலை பார்த்து வந்த 1200 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த ஒப்பந்த நிறுவனத்தை தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேதா என்கிற தனியார் நிறுவனத்தின் கீழ் சுமார் 1700 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.அவர்களுக்கு தின கூலியாக நாள் ஒன்றுக்கு 575 வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த ஒப்பந்த நிறுவனம் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கி வந்த ஊதியத்தை குறைத்து நாள் ஒன்றுக்கு ரூ 500 தான் வழங்க முடியும். இதற்கு சம்மதிப்பவர் வேலை பார்க்கலாம் மற்றவர்கள் வேலைக்கு வேண்டாம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது..
வேதா நிறுவனத்தின் இந்த உத்தரவை எதிர்த்த சுமார் 1200 துப்புரவு பணியாளர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனாலும் தங்களை பணி நீக்கம் செய்துள்ளனர் என்பது தெரியாத துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து தங்களது வேலையை பார்த்து வந்துள்ளனர். இன்று அவர்கள் வேலைக்கு அவர்கள் வந்த போது உங்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும் உங்களுக்கு வேலை இல்லை என்றும் காலை நீங்கள் பார்த்த வேலைக்கு கூலியும் கிடையாது என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்த 1200 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும், முழு ஊதியமும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரியமங்கலத்தை அடுத்துள்ள காட்டூர் பகுதியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் வருவதற்கு முன்னதாக அரியமங்கலம் போலீசார் வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் சாலை மறியல் செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறி பேச்சு வார்த்தை நடத்தியதோடு சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் உங்களின் பிரச்சினைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சாலை மறியல் போராட்டத்தில் இருந்து கலைந்து கலைந்து சென்றுள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வார்டு துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த 5 மண்டலங்களில் 1700 சுய உதவிக் குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக வேதா என்ற நிறுவனத்திற்கு தூய்மை பணிக்கான ஒப்பந்தம் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 1200 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது, இதனால் திருச்சி மாநகராட்சியில் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணிகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25ம் தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தூய்மை பணியாளர்களுக்கும், மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை இதுமட்டுமன்றி கடந்த காலங்களில் போராடி பெற்ற 575 ரூபாய் என்ற சம்பளத்தை குறைத்து 500 ரூபாய் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களான எங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கம் செய்ததை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களின் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil