சென்னையில் வசித்து வருவதால், அனைத்து வழக்குகளுக்கும் ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடும் வகையில், நிபந்தனைகளில் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறேன் என உடல் நலப் பாதிப்பை சுட்டிகாட்டி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபைக் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் அதன் பின்னர் அவர் மீது வேறு சில வழக்குகளும் பதியப்பட்டு சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனிடையே கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர் மீது மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த யூடியுபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சவுக்கு சங்கர் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அது போல் கஞ்சா வைத்திருந்ததாக என் மீது தேனியில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன் என் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து அதன் கீழ் தமிழக அரசு என்னை சிறையில் அடைத்தது குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து பெண் காவலர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் ஜாமின் வழங்கி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்து இடவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போது நான் சென்னையில் வசித்து வருவதால், அனைத்து வழக்குகளிலும் ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடும் வகையில், நிபந்தனைகளில் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பல்வேறு காவல் நிலையங்களில், நிபந்தனை கையெழுத்து போட முடியாத சூழல் உள்ளது. எனவே ஒரே காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் சவுக்கு சங்கர் தற்போது இருதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றம் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் அனைத்து வழக்குகளில் நிபந்தனை கையெழுத்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் ஜாமீன் மற்றும் எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்? என்பது குறித்து தகவல்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சக்திசரவணன் மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“