/indian-express-tamil/media/media_files/M0OQz3o5IVHWBYXS6Ts3.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அருகே தனியார் பள்ளி வேனும் அரசு பேருந்தும் மோதி கொண்ட விபத்தில் 21 பள்ளி குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சரி பள்ளியிலிருந்து இன்று மாலை வகுப்பு முடிந்து 30 குழந்தைகளை வீட்டில் விடுவதற்காக பள்ளிவேன் சென்றுள்ளது. அந்த பள்ளி வேன் ரெங்கம்மாள் சத்திரம் என்ற இடத்தில் சில குழந்தைகளை இறக்கிவிட்டு மீண்டும் திருப்பும் போது பின்னால் திருச்சியில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்று அரசு பேருந்து பள்ளி வாகனத்தின் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 21 குழந்தைகள் காயமடைந்தனர்.
உடனடியாக குழந்தைகளை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த திருக்கோகர்ணம் காவல் நிலைய ஆய்வாளர் சியாமளாவும் தனது வாகனத்தில் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
காயமடைந்த குழந்தைகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் பின்னால் பேருந்து வருவதை கவனிக்காமல் வேனை இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அருணா, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். மேலும் கதறி அழுத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஆறுதல் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.