வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர். இதில் 300"க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 500"க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியானது ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் சாலைகளிலும் கருப்பு கொடியினை ஏற்றிய எஸ்டிபிஐ கட்சியினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி மனித சங்கிலி மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்த அவர்கள், மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.