/indian-express-tamil/media/media_files/fire-accd.jpg)
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரின் அருகே மிகப்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த இந்த கண்மாய் கோடை காலமானதால், தண்ணீர் வற்றி நாணல் புல்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த கண்மைக்குள் மது அருந்துபவர்களும், சமூக விரோதிகளும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கண்மாயில் தீப்பற்ற வைத்துள்ளனர். காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவி பெரும் புகை மூட்டத்தை கிளப்பியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் 15 தீயணைப்பு வீரர்கள், தென்னை மட்டை மற்றும் இலை தழைகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். காற்றின் வேகத்தால் புகை மூட்டம் சூழ்ந்த நிலையில் இரவிலும் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீயில் சிக்கி, பல லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் அருகே உள்ள இளையான்குடி பகுதியில் புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எனவே இந்த இளையான்குடி கண்மாயில் நடமாடும் மது பிரியர்களையும், சமூக விரோதிகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.