/indian-express-tamil/media/media_files/2025/08/24/vijnh-2025-08-24-17-14-00.jpg)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் உலகளவில் புகழ் பெற்றவை. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் இப்பொருட்கள், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கின்றன. தமிழ்நாடு மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படும் இப்பொருட்களில் கர்நாடக இசைக் கருவியான கடம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இதனை சினிமா துறையினரும், இசைக் கலைஞர்களும் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். 2023 ஆம் ஆண்டு மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீட்டு (GI) சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனிடையே வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு, மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் 1 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மண்பாண்ட உற்பத்தியாளர் செந்தில் கூறுகையில்,“ஆதிகாலம் முதலே களிமண் சிலைகள் விநாயகர் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு மக்களின் விருப்பம் அதிகரித்தாலும், நாங்கள் முழுக்க முழுக்க களிமண் சிலைகளையே செய்து வருகிறோம். இந்த ஆண்டு விற்பனை சற்றுக் குறைந்துள்ளது. நான் 5 அடி முதல் 7 அடி உயரம் கொண்ட சிலைகளை தயாரித்து வருகிறேன். இங்கிருந்து சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சிலைகள் அனுப்பப்படுகின்றன” என்றார்.
அதேபோல், தொழிலில் ஈடுபட்டுள்ள அன்புக்கரசி கூறுகையில்: “எங்கள் குடும்பம் தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறது. பாரம்பரியமாக களிமண் விநாயகர் சிலைகளையே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். விற்பனை குறைந்தாலும் மனம் தளராமல் 5 அடி முதல் 8 அடி வரையிலான சிலைகளை தயாரித்து வருகிறோம். தற்போது பல்வேறு வடிவமைப்புகள் கேட்டுக் கொள்கிறார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு மக்கள் ஈர்க்கப்பட்டாலும், நாங்கள் பாரம்பரியத்தை மாற்றாமல் களிமண் சிலைகளையே செய்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் இணைந்து இந்த தொழிலை செய்து வருகிறேன்” என்றார்.
மண்பண்ட தொழிலாளி பாண்டியன் கூறுகையில்,“மானாமதுரையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் வெளி சந்தைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அதே நேரத்தில், மக்கள் நேரடியாக இங்கு வந்து சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். களிமண், வைக்கோல் போன்றவற்றை கொண்டு எளிதில் கரையக்கூடிய இயற்கை வண்ணங்களையே பயன்படுத்துகிறோம்” என்றார்.
பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டு, மானாமதுரை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.