தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று கிண்டி ராஜ்பவனில், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பாதுகாப்புப் படைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு மத்திய அரசின் துறைகளின் தலைவர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தில் என்.டி.ஆர்.எஃப் (NDRF), ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், தெற்கு ரயில்வே, தபால் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் (BSNL) ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்று, விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெயர் கனமழையால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பேரிடர் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆளுனர் ஆர்.என்.ரவி காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கவிருந்த வாரணாசி பயணத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே தென் மாவட்டங்களின் வெள்ள பாதிப்பு குறித்து, தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவை அழைத்து நிலைமை குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
மேலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைச் மீட்கவும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு இந்த ஆலோசனையில் ஆளுனர் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மாநில அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil