தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்கள் திருச்சி நாமக்கல் வழித்தடத்தில் இயக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நாளைய மறுதினம் நாமக்கல் மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து நாமக்கல் வழியாக 16811/16812 மயிலாடுதுறை-சேலம்-மயிலாடுதுறை முன்பதிவு இல்லா தினசரி விரைவு ரயில் சேவை துவங்கப்படுகிறது. 16811 மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில் மயிலாடுதுறையிலிருந்து தினமும் காலை 6:20 மணிக்கு புறப்பட்டு ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, குளித்தலை, கரூர் வழியாக நாமக்கல்லுக்கு மதியம் 12:29 மணிக்கு வந்து 12:30 மணிக்கு புறப்பட்டு ராசிபுரம் வழியாக சேலம் சென்றடையும்.
மறுமார்க்மாக 16812 சேலம் - மயிலாடுதுறை விரைவு ரயில் சேலத்தில் மதியம் 2:05 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் ரயில்நிலையத்திற்க்கு 2:54 க்கு வந்து 2:55 மணிக்கு புறப்பட்டு மோகனூர், கரூர், குளித்தலை, திருச்சி, பூதலூர், தஞ்சாவூர், ஆலங்குடி, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை சென்றடையும்.
இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், நாமக்கல், கலங்கானி, ராசிபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதன் மூலம் நாமக்கல் ரயில்நிலையத்தில் இருந்து இனி நேரடியாக ரயில் மூலம் திருச்சி, தஞ்சாவூர், ஆலங்குடி, பாபநாசம், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கும் அங்கு உள்ள முக்கிய ஆன்மீக தலங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் எளிதாக சென்று வரலாம்.
இந்த ரயில் சேவையை நாமக்கல் மக்கள் அதிகம் பயன்படுத்தி பயனடைய வாய்ப்பு இருக்கின்றது. மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக நாமக்கல்லுக்கு கூடுதல் ரயில் இயக்கப்படுவது திருச்சி கரூர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil